லெப்.கேணல் - சிவனேசன்/ வெள்ளை

லெப்.கேணல் - சிவனேசன்/ வெள்ளை
அதிகாலை 4.00 மணி எமது யாழ் நகர்வு அணி கைதடியில் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டது.நான்கு போராளிகள் வீரச்சாவு என்பதும் அறிய வருகிறது, ஒரு போராளி தப்பிவிட்டார். ஆனால் யார் தப்பிச்சென்றவர் விபரம் தெரியவில்லை ஒரு வாரமாய் வீரச்சாவடைந்தவர்களுள் சிவனேசன் இருக்கக்கூடாதென எல்லோர் மனங்களும் ஏங்குகின்றன. ஆனால் தப்பிச்சென்றவன் சிவனேசன்தான் என எம்மனம் சொல்லுகின்றது.
அவன் இதுமாதிரி பலமுறை எதிரிக்குத் தண்ணிகாட்டியவன், ஒன்றா, இரண்டா எண்ணிக்கையற்ற தடவைகள் எத்தனை தடவைகள் என்பது அவனுக்கே மறந்த விடயம்.எத்தனை தடவைகள் அவன் புத்தி சாதுரியத்தாலும் அவனுக்கே உரிய துடிதுடிப்பான செயலாலும் வென்றிருக்கின்றான்.ஆகவே ஆகவே தப்பிச்சென்றது அவன்தான் என என் மனதுக்குள் ஒரு எதிர்பார்ப்பு.
மேஜர் குலதீபனுடன் வீதியால் வந்துகொண்டிருக்கும் போது திடீரென வழிமறித்த இராணுவத்தைத் தாக்கிவிட்டுத் தப்பிவிடுகிறான்.அதல் மேஜர் குலதீபன் வீரச்சாவடைகிறார். கந்தரோடைப்பகுதியில் எமது சிறிய அணியொன்று தங்கியிருந்த வீடு இராணுவ முற்றுகைக்குள்ளானபோது அதிலிருந்து முற்றுகையையுடைத்து முதலில் வெளியேறித் தப்பிச்சென்றவன் இவனே!
மிகச் சமீபகாலப் பகுதியில் நவாலியில் கிளைமோருடன் வந்துகொண்டிருந்தபோது வழிமறித்த இராணுவத்தினருக்கு அடித்துவிட்டுத் தப்பிச் சென்றவர்களுள் இவனும் முதன்மையானவன். ஆங்கிலத் திரைப்படங்களிலே பார்த்துப் பரவசப்படும் சாகச நிகழ்வுகளைத் தனது போராட்ட காலத்தில் தனிப்பட்ட ரீதியில் எதிர்கொண்டவன் இதனாலேயே நண்பர்களால் 'ஜக்கோல்' என ஆங்கிலத் திரைப்படமொன்றின் சாகச நாயகனின் பெயர்கொண்டு அழைக்கப்பட்டவன்.
இப்படியானவன் தப்பியிருப்பானென்ற என் எண்ணத்தில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஆனால் நாட்கள் வாரமாக நம்பிக்கை குறையத்தொடங்கியது. சிவனேசன் இருந்திருந்தால் இவ்வளவிற்கு (தொடர்பெடுத்து) கதைத்திருப்பானே! என்ன நெருக்கடி என்றாலும் தொடர்பு கொண்டிருப்பானே! கேள்விகள் பலவானாலும் அவற்றில் விடைகளை எனக்குச் சாதகமாகவே சொல்லிக்கொண்டேன்.ஆனால் அறிந்துகொண்டிருந்த விபரங்களோ சிவனேசன் வீரச்சாவென்பதை உறுதி செய்வனவாகவே இருந்தன. எல்லா எதிர்பார்ப்புக்களையும் சிதறடித்து சிவனேசனின் வீரச்சாவுச் செய்தி வந்தது.சிவனேசனின் வீரச்சாவு யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இலகுவில் ஈடுசெய்யமுடியாத இழப்பு .இருந்தும் அது நேர்ந்துவிட்டது. இவனை நான் ஆரம்பப்பயிற்சிப் பாசறையிலே முதலில் சந்தித்தேன்.எந்நேரமும் துறுதுறுத்தபடி இருப்பான். 'குழப்படிக்காரன்' என்றே பயிற்சி முகாமில் முத்திரை குத்தப்பட்டவன் 1996இல் பயிற்சி முடிந்ததுமே சூரியக்கதிர் 01 நடவடிக்கைக்கெதிரான சண்டைக்குச் சென்று காலில் காயப்பட்டு மருத்துவ முகாமிலிருந்து பின் சிறிதுகாலம் நிர்வாக வேலைகள் செய்தான் அங்கும் இவனது துறுதுறுப்பான செயல்கள் ஆனாலும் அவனுக்குக் கொடுக்கப்பட கடமைகள் சரிவர நடக்கும்.
இவனது துடியாட்டமான துறுதுறுத்த தன்மையே 1996ல் யாழ் சென்ற அணியின் உதவியாளனாய் இவனை அழைத்துச்செல்லத் தூண்டியதென நினைக்கிறேன். அவனது அத்துடுக்குத்தனமும் துடியாட்டமும் அவன் வீரச்சாவடையும்வரை அவனுடனேயே இருந்தன. ஆயினும் பிற்காலத்தில் அனுபவம் வாய்ந்த ஓர் ஆர்வமிக்க புலனாய்வாளனாய் வர இதுதான் அவனுக்கு உதவியதோ என எண்ணுகிறேன்.
1996லிருந்து வீரச்சாவடையும்வரை யாழ் மண்மீட்பிற்கான தடைகளை அகற்றுவது தனது பணிகளாக ஏற்று எதிர்பார்ப்புகளுக்கு மேலாகச் செய்துதந்தவன். யாழிலுள்ள எமது போராளிகள் நெருக்கடிக்குள்ளாகும்போது அவர்களை அழைத்துவர வேண்டுமென்றால் எல்லோருமழைப்பது சிவனேசனைத்தான் ஏனெனில் அவன் தனியேயும் சென்றுவருவான், சென்றும் வந்துள்ளான்.
யாழ்ப்பாணத்தில் அவனைத் தெரியாதவர்களில்லை. அவனுக்கும்தான் எதிரிக்கும்தான். எதிரி வெள்ளையைத் தெரியுமா? என இவனிடம் விசாரித்த சம்பவங்களும் உண்டு.
இவனுக்காகவே சுற்றிவளைப்பும் நடக்கும் சுற்றிவளைப்புக்குள்ளிருந்து தந்திரமான முறையில் இவன் வெளிவந்த சம்பவங்கள் நிறைய உண்டு. தனது பலமே மக்களோடு தான் பழகும், நேசிக்கும் தன்மைதானென்பான். ஆம் அந்தளவு இவன் மக்களை நேசித்தான். சிவனேசன் யாழ்ப்பாணத்திலென்பது எப்போதுமே இரகசியமான விடயமாகப் பத்துநாட்கள் வரையிருக்கும். பிறகு அங்கு கண்டேன், இங்கு கண்டேன் என்ற செய்திகள் மக்களால் இங்கு கிடைக்கும்.
தன் கைப்படவே வரைந்து தேசியத் தலைவரின் பிறந்த நாளிற்கு வாழ்த்து அனுப்புவான்.வாழ்த்துக் கிடைத்ததென வரும் நன்றி தெரிவித்த கடிதத்தைக் காட்டிப் பெருமிதம் கொள்வான். இவனுக்குத் தேசியத் தலைவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. எமக்குச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்ட போதெல்லாம் இவன் யாழ்ப்பாணத்தில் நிற்கும் சூழல். இப்படியே பல சந்தர்ப்பங்கள் தவறிப்போயின. ஆயினும் தனது தலைமையில் அசைக்கமுடியாத விசுவாசமும் ஆழமான பற்றுமுடையவன்.
'நான் இம்முறை யாழில் செய்யப்போகும் தடையகற்றல் மூலமே தேசியத் தலைவரிடம் இனங்காட்ட விரும்புகிறேன். நான் சாதிக்கும் செயலின் மூலம் அவரின் மனதில் நிலையான இடத்தைப்பெறுவேன். என்று கூறிவிட்டே சென்றவன். அவனது கனவுகள் நிறைவேறாது போனாலும் அக்கனவுகளை நனவுகளாக்க இலட்சியத்துடிப்புடன் மேலும் யாழ் செல்வர் அவன் கொண்ட இலட்சியம் நிறைவேறும்வரை, யாழ்மண் மீட்கப்படும்வரை, தமிழீழம் மலரும்வரை எம் பணி ஓயாது. சிவனேசன் அவன் மரணிக்கவில்லை. அன்பு மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் யாழ் வானில்; ஓர் நட்சத்திரமாக இருந்து எமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றான். யாழ் நோக்கிய எமது பயணத்திற்கு இவனின் நினைவுகளே ஓர் உந்துசக்தி!
மா.பிரதீப் (புலனாய்வுத்துறை)