கேணல் கிட்டு

கிட்டண்ணா ஒரு அற்புதமான போராளி -ச.பொட்டு
கிட்டண்ணையின் எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுப்பது கடினம் இயக்கத்தின் எந்த ஒரு பணியானாலும் புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்துவார்.ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி நீண்டவிரிவுரை நிகழ்த்தும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார்.
வெறுமனே சிந்தித்துவிட்டு, சொல்லிவிட்டு, எழுதிவிட்டு,அதனை மறந்துவிடும் அல்லது கைவிடும் சாதாரணமனிதர் அல்ல கிட்டண்ணை.அவரது எல்லா சிந்தனைகளும் செயல்வடிம் பெறவேண்டும் என்பதில் விடாபிடியானவர்.கிட்டண்ணையின் நிர்வாகத்திறன் வித்தியாசமானது தன்கீழ் பணியாற்றும் எல்லோரையும் தன் வசப்படுத்தும் தான்நினைத்ததைச் செய்ய வைக்கும் திறன் அவரதுதனித்துவமான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது.
ஒவ்வொரு வேலைகளையும் தானே திட்டமிட்டு நேரில்நின்று சரிபார்த்து அவற்றைஒழுங்கமைப்பார் குட்டிசிறியின் மோட்டார்செல்லுக்கு கரி மருந்து அளவு பார்ப்பதிலிருந்து நண்டுக்கறிக்கு உள்ளி தட்டிப் போடுவதுவரை எதுவாயிருந்தாலும் தானே நின்று சரிபார்த்து ஆரம்பித்து வைத்தால்த்தான் அவருக்கு திருப்தி.கிட்டண்ணையின் இராணுவ நிர்வாகத்திறன் உலகறிந்த விடயமாகும் தானே சண்டைக்களங்களில் முன்நின்று வழிநடத்துவது அவரது தனிப்பண்பு.1987 க்கு முன்னைய காலங்களில் யாழ்க் குடாநாட்டிற்குள் இராணுவ நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு அவர் பயன்படுத்தியது தன்வசமிருந்த குறைந்த ஆயுதங்களையும் போராளிகளையும் மட்டுமல்ல எதிரியை முட்டாளாக்கும் தந்திரோபாயத்தையும் தனது மனவலிமையும் சேர்த்தே பயன்படுத்தினார்.நெருக்கடியான நேரங்களில் அவர்காட்டும் மனவலிமை நம்ப முடியாததாய் இருக்கும்.
அடையாளம் தெரியாத எதிரி அந்த வீரனுக்கு குறிவைத்த ஒரு மங்கலான மாலைப்பொழுது.வழமையாக எரிந்து கொண்டிருக்கும் மின்குமிழ் எரியவில்லை.அவரது கார் நிறுத்தப்பட்டு கதவைத் திறந்து இறங்க முற்படும் வேளையிலேயே அந்தநிழலான உருவத்தின் அசைவு உள் உணர்வுகளை எச்சரிக்கிறது.நிதானிப்பதற்கிடையில் வந்து விழுந்தது கிரனேட் தான் என்று அவசரமாக வெளியேற முற்பட்ட வேளையிலேயே அது வெடித்துவிட்டது.ஆசையாய் வைத்திருந்த சின்னக் காரின் ஸ்ரெயறிங் கிற்குள் சிக்குப்பட்ட காலை இழுத்து எடுப்பதற்கிடையில் வெடித்துவிட்டது.இதுவரை நிகழ்ந்தவை சாதாரணமானவைகள்.எந்த ஒருவருக்கும் ஏற்படகூடியவைதான் ஆனால் அதன்பின்னர் அவர்நடந்து கொண்டவிதம் கிட்டண்ணைக்கேஉரிய தனித்துவம்வாய்தது . முழங்களுடன் துண்டாகிப்போய் துடித்துக்கொண்டிருந்தது அவரது கால் கிரனேட் வந்த திசையைநேக்கி அவரது ரிவோல்வர் மூன்று சூடுகளைச்சுட்டு ஓய்ந்தது.அவரது நினைவு மங்குகிறது.முழுமையாய் இருந்த ஜீன்ஸ் பக்கத்தைக் கிழித்து துண்டாகிப்போன காலுக்குத்தானே கட்டுப்போட்டுக்கொண்டிருக்கையில் நினைவு மேலும் மங்குகிறது. உள் உணர்வு அவரை எச்சரித்தது. கிரனேட் எறிந்தவன் அருகில் வருவான் அவனைச் சுடவேண்டும் என்ற உணர்வு அவரை முழுமையாக மயங்கிப்போய்விடாமல் வைத்திருக்கிறது கிரனேட் எறிந்தவன் வருவான் வருவான் எனத்திரும்பத்திரும்ப நினைத்துத்தன்னை முழுமையாக மயங்கிப்போய்விடாமல் வைத்திருந்தார்.மூன்று சூடுகளைச் சுட்டு விட்டேன்.ரிவோல்வரில் இன்னும் மூன்று ரவைகள்தான் மிச்சமாய் உள்ளது.என்பது என்பது நினைவில் உறைக்கும்போது அவர் மயங்கிக்கொண்டிருந்தார்.
வைத்தியசாலை இவ்வளவுபக்கத்தில் இருந்தபடியால்தான் அவர் உயிர் தப்பினார் என்பதும் சந்திரசிகிச்சை அறைக்கு எடுத்துச்செல்லப்பட்ட கணத்தில் அவரது இதயத்துடிப்பு முற்றாகவே நின்றுவிட்டிருந்தது.என்பதும் அவர் உயிர் தப்பியது மருத்துவ உலகின் புதினம் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள்.
அவர் காயப்பட்டு இரத்தவெள்ளத்தில் மயங்கிக்கிடந்த இடத்தில் தனது ரிவோல்வரை இறுகப்பற்றியபடி கிடந்தார் என்பதும் தனது ரிவோல்வரில் சுட்டுவிட்ட ரவைக்களுக்குப்பதிலாக புதிய ரவைகளை மாற்றிப் போட்டிருந்தார் என்பதும் ஆனால் நினைவு தப்பிய நிலையில் அவர் வெற்றுக் கோதுகளுக்குப் பதிலாக மீதியாய்இருந்த நல்லரவைகளை வெளியே எடுத்துவிட்டு அந்த இடத்யிற்கே புதிய ரவைகளை போட்டிருந்தார் என்பதும் அனேகம் பேருக்கு தெரியாத விடயங்கள் அன்று மட்டுமல்ல தனது போராட்ட வாழ்வின் ஒவ்வொரு நாட்களிலும் சந்தர்ப்பங்களிலும் அவர் தனது மனஉறுதியை வெளிப்படுத்தினார்.
அதுவரை காலமும் யுத்த முனைகளிலும் தாயக பூமியின் எல்லாப் பரப்பிலும் கம்பீரமாய் உலாவிவந்த வேங்கை கால்உடைந்து கட்டிலில் விழ்ந்தபோதும் தன்னைச் சோர்வு சூழவிடவில்லை.எந்தச்சந்தர்ப்பத்திலும் போராட்டத்திற்கான,போராளிகளுக்கான எந்தவொரு வேலையையும் பொறுப்பேற்றுச் செய்ய கிட்டண்ணை தயங்கியதில்லை தனக்கு ஒப்படைக்கப்படும் வேலை தனது தனிப்பட்ட நிலையினை எப்படித் தீர்மானிக்கும் என்பது பற்றி ஆராயாமல் இலட்சியத்திற்காக உழைத்தவர் .தலைவர் அவர்களின் தனிப்பட்ட மெய்க்காவலராக இருந்த போதிலும்சரி தலைவர் அவர்களுக்கு அடுத்தடுத்தபடியான தலைவனாக வளர்ந்து இருந்தபோதிலும்சரி அவர் இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறவே இல்லை.
1983 இன் ஆரம்ப நாட்கள் எம்மில் பன்னிருவருக்கான பயிற்சி. எல்லாமாக இருபத்தைந்துபேர்வரையில் உள்ளடங்கிய காட்டு வாழ்கை பஸ் ஸில் போய் கிளிநொச்சி அங்காலை எங்கையே இறங்கி இருளும்வரை ரோட்டில் நின்று ரைக்ரரில் ஏறி உள்ள காடெல்லாம் சுத்திச் சுழன்று நடுக்காட்டில் ஒரு சிறியகொட்டிலுக்குப்போய்ச் சேர்ந்தோம்
வடக்கு எது கிழக்கு எது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு நின்று அதிகாலை முடிந்து விடியும்போது பார்த்தால் சூரியன் மற்றப்பக்கத்தால் உதிக்கிறது.அனேகமாக உடையார்கட்டுப் பக்கமாக இருக்கவேண்டும்.
எமது பொறுப்பாளர்களில் அநேகரை தெரியும் சிலரை தெரியாது கிட்டண்ணையை நல்லாகவே தெரியும்.கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பவர்கள் என்றுசொல்லி அவர்தான் எம்மில் இருவருக்கு ஒரு வீட்டில் அறை எடுத்துத்தந்துருந்தார்.தினமும் பின்னேரம் வந்து கோஸ் ரணிங் செய்யச் சொல்லிவிட்டு வாட்டத் தொடங்கினால் மனுசன் என்னத்தைச் சொல்ல வாழ்கை வெறுக்கும்... வேகம், வேகம்,இன்னும் இன்னும் என்று சொல்லி 5 மணிக்கு தொடங்கியது ஏழெட்டு மணிக்கு முடியும்போது அந்தப்பெரிய விராந்தை நிலம் வியர்வையால் நிரம்பி ஓடும் அதுவரை எதுவும் கதை இல்லை இங்கிலீசும் தமிழுமாய் செய் ,செய் ' என்பதுதான் இயலாது என்றால் அப்ப உனக்கு ரெயினிங் இல்லை போ என்னத்தைக்கதைப்பது அதற்குப் பிறகுதான் என்முடன் அன்பாகக் கதைப்பார்.
ரஷ்ய மொழிபெயர்ப்பான தாய் நாவலை முழுமையாகப்படிக்கும்படி தந்திருந்தார். அது பற்றிக் கேள்விகள் கேட்ப்பார்.பாவலின் நண்பர்களின் பெயர் கேட்ப்பார்.காதலி பெயர் கேட்ப்பார்.ஆரம்பத்தில் வாசிக்கும்போது பழக்கமின்மையால் கரடு முரடானதாகத் தெரியும் மொஸ்கோ மொழி பெயர்ப்பு நூல்களை வாசிப்பதில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவர்தான்.இப்படி எமக்கு முன்னரே அறிமுகமாகி இருந்தவர் எமது காட்டுப் பயிற்சி முகாமில் இருக்கிறாரா என்று தேடினால் ஆள் வருகின்றார் கையில் அகப்பையுடன் எல்லோரும் நல்லாய்ச் செய்யச் செய்ய வேண்டும் என்றும் தான்தான் இங்கு சமையல் என்று குட்டியாய் லெக்சர் அடித்துக்கொண்டு நின்றுவிட்டுத் தலைவரை கண்டதும் ஓடி ஒழிந்தார்.பெரிய பொறுப்பாளனாய் ஒருவரை எமக்கானசமையல்காரராய்ச் சந்திப்பது நம்பமுடியாத அனுபவமாயும் புதிய பாடமாயும் அமைந்தது.எமது அந்த முகாமின் சமையல் வேலை என்பது அந்தக் காலத்தில் சுலபமானதல்ல குறுகிய காலம் பயிற்சி என்பதால் மிகவும் நெருக்கமான நேர அட்டவணை உடற்பயிற்சி ஆசிரியர் புலேந்தி அம்மான் போட்டு வாட்டிப்போட்டு விட்டால் அடுத்த சந்தோசம் மாஸ்டரின் வகுப்பிற்கு இடையில் உள்ள குறுகிய உணவு வேளையில் சமையல் கொட்டிலுக்குப் போவது நடந்து அல்ல போகும் வேகத்திற்கு அங்கே தடிகளால் கட்டிய சிறாம்பில் உணவு தட்டுகளில் போட்டு மூடி வைத்திருக்கும் கிட்டண்ணையும் ரஞ்சனும் இணைந்து சமையல் மூன்று வேளையும் நேரம் தவறாமல் உணவு கொடுக்க ஒருநாள்கூட நேரம் தவறியதாகவோ வேலையில் சினந்ததாகவோ நினைவில் இல்லை.ஆனால் தங்களது வேலைச்சுமையைக் குறைப்பதற்கான குறும்பு இருக்கும். உணவு தட்டுகளில் இலக்கம் இடப்பட்டுஇருக்கும்.தட்டுக்களை இலக்கம் மாறி எடுப்பவர்கள் அன்றைய சமையல்பாத்திரங்களைக் கழுவிக் கொடுக்க வேண்டும்.ஆரம்பத்தில் தட்டு இலக்க ஒழுங்கில் இருந்தன. பிரச்சனை இல்லை.இடையில் ஒருநாள் எல்லாம் மாறி இருந்தது. யார்பார்த்தது அன்று நாங்கள் பாத்திரம் கழுவினோம்.பார்த்து சிரித்தார்கள் ஆனால் பின்னர் நாங்கள் உசாராகிவிட்டோம்.றெஜிக்கு இலக்கம் ஆறு விக்ரருக்கு இலக்கம் ஒன்பது.அவர்கள் அடிக்கடி கழுவிக் கொடுத்தார்கள் அவர்கள் சரியாக எடுத்தாலும் இவர்கள் விட்டாதானே.இப்படி பம்பலும் குறும்புமாய்த் தான்.ஆனால் கடமை தவறியதில்லை.சமையலில் அலட்சியம் இருந்தது இல்லை.
நீண்டகாலஓட்டத்தின்பின் ஒரு நாள் தலைவர் கூறுகிறார்-என்ன கடமையாக இருந்தாலும் அதைப்பொறுப்போற்றுச் செய்ய பின்நிற்கக் கூடாது. கடமையில் உயர்ந்து தாழ்ந்தது என்றில்லை ஆரம்பகாலத்தில் ஒருமுறை எமது புதிய பயிற்சி முகாம் ஒன்றில் எல்லோரும் வேலைகள் பங்கிட்டு நிர்வாகத்தைச் சீர் செய்து கொண்டு இருந்தவேளை-கிட்டுதானே முன்வந்து அனைவருக்குமான சமையல் வேலையைப் பொறுப்பெடுத்து செய்தார்.
புதியபோராளிகளுக்கு தலைவர் எடுத்துச் சொல்லும் விடயத்தை அன்று நாங்கள் நேரே கண்டோம்.அது எமக்கு போராட்டம் பற்றியும் ஒரு பாடத்தை வித்தியாசமான முறையில் எடுத்துச் சொல்லியது .கிட்டண்ணை வேலைகள் பொறுப்பேற்பதிலும் அந்தஸ்தினை தரத்தினைப் பார்ப்பது இல்லை.ஆனால் அவர் வேலை ஒழுங்கு செய்யும் விதமும் செய்து முடிக்கும் பாங்கும் அந்த வேலைக்கு ஒரு அந்தஸ்தினை உயர்தரத்தினை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை.
கிட்டண்ணை இறுதியாக நாட்டைவிட்டுப் புறப்படும்போது காலத்தில் அவர் மிகவும் நொந்து போயிருந்தார்.இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட தன்னையும் சக போராளிகளையும் விடுவிக்கும்படி சிறையில் உண்ணாவிரதம் இருந்ததும் அதனைத் தொடர்ந்து அவர் யாழ்நகரில் விடுவிக்கப்பட்டதும் அதன் பின்னர் அவர் மணலாற்றுக் காடு சென்று தலைவருடன் இணைந்து கொண்டதும் தெரிந்தவைதான்.தன்னுடன்இறுதிவரை துணைநின்ற போராளிகள் சிறையில் வாடுவதையும் இந்தியர்கள் தன்னைமட்டும் விடுவித்துவிட்டு தன்தோழர்களை சிறையில் வாட்டுவதையும் சொல்லிச் சொல்லி வேதும்புவார் என்ரை கோஸ்டி எல்லாத்தையும் என்னட்டை இருந்து பிரிச்சுப் போட்டாங்கள் மச்சான் என்று சொல்லும்போது அந்த வீரனின் நெஞ்சின்ஈரம் கண்களில் வந்து நிற்கும்.கிட்டண்ணை சர்வதேச தொடர்பாளராக நாட்டை விட்டுப் புறப்படுவது என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது.எந்த வேலையாக இருந்தாலும் பொறுப்பேற்க வேண்டும் என்ற அவரது வழமையான நடைமுறைக்கு சோதனையாக வந்தது இம்முடிவு.எங்கோ ஒரு ஜரோப்பிய நாட்டில் எம் தாயக மண்ணை விட்டு வெகு தொலைவில் தான் உயிராய் நேசித்த போராளிகளை விட்டுப் பிரிந்து ..தன் மக்களை விட்டுப்பிரிந்து தாய் தந்தையாய் தன்னை வளர்த்த தலைவரை விட்டுப்பிரிந்து.... நினைத்து நினைத்துக்
கலங்கினார்.
மணலாற்றுக்காடு.நான் அப்போது யாழ் மாவட்ட நிர்வாகத்தை பானுவிடம் ஒப்படைப்பதற்காக யாழ்ப்பாணம் புறப்பட இருந்தேன்.எம்மிடையே நீண்ட பிரிவு வரப்போகிறது என்பது தெரிகிறது.சிறிய வட்டக் கொட்டிலில் வைத்து கதைக்கத் தொடங்கினார்.இயக்கத்தில் ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி தலைவரின் எண்ணங்களுக்கு நாம் எப்படி செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி எமது போராட்டத்திற்காக என்ன வேலை ஒப்படைக்கப்பட்டாலும் அதில் தீவிரமாக ஈடுபட வேண்டும் .எமது கடமையை மேலும் மேலும் சிறப்பாகச் செய்வதற்கு வேண்டிய சகல முயற்சிகளிலும் இறங்க வேண்டும் எனக்கு என்ன வேலை எண்டாலும் செயவன் எங்களின்ரை பெடியளின் உடுப்பைத் தோய்த்து மடிக்கும் வேலை எண்டாலும் செய்வன்.அதை எப்படி வெள்ளையாய் தோய்ப்பது என்று ஆராய்ச்சி செய்வேன்.எனக்கு இது பிரச்சனை இல்லை. எனது பொறுப்பு மாற்றத்திற்காக சொன்னாரா?அல்லது தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் தனது மனப் போராட்டத்திற்கு தனக்குத் தானே சொன்னாரோ தெரியாது.
அவர் சொல்லிகொண்டே
இருக்கின்றார்.தூரத்தே கேட்கும் சில் வண்டுச் சத்தத்தைவிட காடு நிசப்தமாய் இருக்கிறது நீண்ட கனத்த மௌனத்தின் பின் எங்கடை சனத்தையும் இந்த மண்ணையும் விட்டுட்டுப் போகப் போறன் மச்சான் இனி எந்தக்
காலமோ சொல்லி முடிக்காமல் குமுறிக் குமுறிக் அழத் தொடங்கினார்.எமது தாயகத்தின் மீது எமது மக்களின் மீது எமது விடுதலைப் போராட்டத்தின் மீது எமது தலைவர் மீது அவர் வைத்திருந்த பாசம் பற்று அளவிடமுடியாதது.
ச.பொட்டு
மாசி- 1993 இதழ் 11
வெளிச்சம் இதழில் வெளியானது.