உன் மரணம் எம்முள் புதுமூச்சாய்.... !

உன் மரணம் எம்முள் புதுமூச்சாய்.... !

இமெல்டா!


ஓ என் இனிய தோழி! தமிழீழ விடுதலைப் போரில் உதிர்ந்து விட்ட புனித மலர்களில் ஒன்றாக நீயும் இணைந்துவிட்டாயா? மலரவிருக்கும் தமிழீழம் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமெனக் கனவு கண்டாய். உன் ஆசையெல்லாம் நிறைவேற முன்னரே உன் கனவுகளிற்குக் கரும்புள்ளி வைத்து உன்னை எம்மிடமிருந்து பிரித்த பாதகர்கள் யார்?
எமது இனத்தின் எதிரிகளான இனவெறி பிடித்த சிங்களக் கைக் கூலி இராணுவத்தினரா? அப்படியானால் கூட எமது மனம். கொஞ்சம் ஆறுதல் அடைந்திருக்கும் களத்தில் எதிரிகளுடன் மோதி நீ கொண்ட இலட்சியத்திற்காக உன்னைத் தியாகம் செய்திருக்கின்றாய் என்று. ஆனால் எமது இரட்சகர்கள் என்ற போர்வையில் எமது மண்ணில் காலடி வைத்தவர்களின் துரோகக் கரங்களினால் உன் கதை முடிக்கப் பட்டுவிட்டது என்பதை எண்ணும் போது என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை. உனது இறப்பில் உலகின் நான்காவது பெரிய இராணுவம் என்னதான் திருப்தியைக் கண்டதோ? 
என்றும் எமது போராட்டத்திற்காகக் குரல் கொடுக்கும் தமிழகத்தைக் கொண்டது இந்தியா - உலகின் நான்காவது பெரிய இராணுவப் படை கொண்டது இந்தியா. கண்ணியமான வீரர்களைக் கொண்டது இந்தியா என்றெல்லாம் நாம் அறிந்திருந்தோம். கடைசி விஷயம் எமது தவறான கணிப்பீடு என்பதைக் காலம் இப்போது எமக்கு உணர்த்தியிருக்கிறது. 
உன் மரணம் ஒன்றை மட்டும் எமக்குப் புலப்படுத்துகின்றது. 'நேர்மையான எதிரியை விட வஞ்சகமான நண்பர்கள் ஆபத்தானவர்கள்.' 
உன் நினைவுகளை என்னால் மறக்க முடியுமா? கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு போராளி இறுகிய மனமுடையவளாக இருக்க வேண்டும். அப்போது தான் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் சக்தியை அவள் பெற்றிருப்பாள் என்று சிலர் நம்புகின்றார்கள். உண்மையில் மென்மையான இதயத்தைக் கொண்டவர்கள்தான் போராளிகள் எனப்படுவோர். தனது இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டும் அதைச் சகித்துக்கொள்ளும் கடினமான மனது இல்லாதவர்களே போராளிகளாகிறார்கள். மென்மையான மனதைக் கொண்டவர்கள் என்பதாலேயே நாம் எல்லாம் இணைந்து கொண்டோம். 
'பயிற்சியை முடித்துக் கொண்டு செல்லும் எம்மை சமூகம் சாதாரண பெண்களாகப் பார்ப்பது கிடையாது. இப்படியான இழிநிலையைப் போக்கி எமது இலட்சியப் போராட்டத்தின் பங்காளிகளாகத் தமிழீழப் பெண்கள் அனைவரையுமே மாற்ற வேண்டும். இது படிப்படியாகத்தான் சாத்தியமாகும். ஆனால் எப்படியும் இதை நடைமுறையில் நடத்திக்காட்ட வேண்டும்' என்றெல்லாம் அடிக்கடி கூறுவாயே. அதையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன். உன் கனவுகள் நிஜமாகி வருகையில் நீ... 
அகிம்சைப் போராட்டங்கள் மூலம் விடுதலை அடைந்து இன்று மகத்துவத்தை மறந்திருக்கும் பாரத நாட்டிற்கே அகிம்சைப் போராட்டத்தின் வலிமையை உணர்த்தியிருக்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வலிமையை உணர்த்தியிருக்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த அத்தனை ஊர்வலங்களிலும் மறியல் போராட்டங்களிலும் தமிழீழப் பெண்களின் எழுச்சிமிகு பங்களிப்பைக் கண்டு உலகமே வியக்கிறது. உலகத்திலேயே தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணா நோன்பிருந்து தியாகியான முதல் பெண் பூபதி கணபதிப்பிள்ளை என்ற தமிழீழப் போராளிதான். அதே போல் வீரத்திலும் கூட (ஆயுதப் போராட்டத்தில்) நாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை வரலாறாக்கிவிட்டோம். 
முறத்தால் புலியை விரட்டியவள் தமிழ்ப் பெண் என்று புறநானூறு கூறுகிறது. அது நடந்ததோ என்னவோ ஆனால் புலியாகவே மாறித் தம்மை எதிர்ப்பவர்களை புறமுதுகு காட்டி ஓடவைத்தவர்கள் தமிழீழப் பெண்கள் என்று புதிய காவியம் படைக்கப்படுகின்றது. 
உன்னை நினைக்கையில் எமது நினைவுக்கு வருவது உனது சிரிப்புத் தான். நீ சிரிக்கத் தொடங்கினால் தொடர்ச்சியாகவே சிரிப்பாய். எளிதில் நிறுத்த மாட்டாய். இதற்காகவே 'ஜெனரேற்றர்' என்று அழைப்போம் உன்னை. அந்த 'ஜெனரேற்றர் சிரிப்பை பார்க்கவோ கேட்கவோ முடியாத இடத்திற்கு போய் விட்டாயே நீ. 
பள்ளிச் சீருடையுடன் வீட்டிலிருந்து புறப்பட்ட உனது வரலாறு இராணுவச் சீருடையுடன் முடிந்து விட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்காளியாக வேண்டும் என்ற ஆவலுடன் யாழ்ப்பாணத்தின் குருநகர்ப் பகுதியில் மத்தியதர குடும்பத்திலிருந்து வந்து இயக்கத்தில் இணைந்து கொண்டவள் நீ. நீயும் நானும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவர் வீட்டில் தான் முதன் முதலில் அறிமுகமானோம். எங்களைப் போலவே வேறு சில பெண்களும் அங்கே வந்து எம்முடன் இணைந்தனர். விரைவில் பயிற்சிக்காகக் கூட்டிச் செல்லப்படுவோம் என்ற செய்தி கிட்டியது. இது எமது மகிழ்ச்சியை அதிகரித்தது. 
'பயிற்சி பெற்றுத் தமிழீழத்தில் ஆயுதம் தாங்கிப் போராடப் புறப்பட்ட முதல் பெண் போராளிகளாகத் திகழ்வோம் - நாம் தமிழீழத்தை மீட்டெடுத்து எமது வருங்காலச் சந்ததியினர் தலை நிமிர்ந்து வாழ வழி சமைப்போம்.' இப்படியான இனிமையான கனவுகள் உடன் பயிற்சி முகாம் நோக்கிப் புறப்பட்டோம். தமிழீழ விடுதலைக்கான இயக்கமென்று எண்ணிப் பெருமைப்பட்டு நாம் இணைந்த இயக்கத்தின் சகோதரிகள் விடுதலைப் பாதையிலிருந்து விலகியிருக்கின்றார்கள். எமது எதிரியைத் தவறாக இனம் காட்டுகிறார்கள் என்ற உண்மை முகாம்களிற்கு வந்த பின்பு தான் எமக்குப் புரிந்தது. ஆம்! நாம் இனைந்து கொண்டது விடுதலைப் புலிகள் அமைப்பில் அல்ல. நமக்குத் தெரியாமலே சமூக விரோதக் கும்பல் ஒன்றில் சேர்ந்து விட்டோம். பயிற்சி முகாமில் தமது எதிரிகள் விடுதலைப் புலிகள் என்றே எமக்குப் போதித்தார்கள். தமிழீழ விடுதலையைத் தவிர ஏனைய விடயங்களில் தான் கூடிய அக்கறை செலுத்துகிறார்கள் என்ற உண்மை எமக்கு எமக்குத் தெரிய வந்ததும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனால் நாங்கள் தமிழீழப் போராட்டத்தின் பங்காளிகளாக வேண்டுமாயின் ஒரு உண்மையான, தௌவான தலைமையின் கீழ் தான் அணிதிரள வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தோம். .அதனால் அந்த அமைப்பிலிருந்து விலகி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகொண்டோம். எமது நிலையை விளக்கினோம். 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடன் நாம் சந்தித்து உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஏற்கனவே இடம்பெற்ற போராட்ட அணுகுமுறை சம்பந்தமாகவும் விடுதலைப்புலிகள் அமைப்பு சம்பந்தமாகவும் எமக்கிருந்த சில சந்தேகங்களைக் கேட்டோம். அவரும் விளக்கமாகப் பதிலளித்தார். 'இந்தப் போராட்டத்தில் நீங்கள் கஸ்டத்தையும் பட்டினியையும் தான் சந்திக்க வேண்டியிருக்கும். பயிற்சிகளோ மிகக் கடுமையாக இருக்கும். ஆனால் இவையெல்லாம் எமது எதிர்காலச் சந்ததியினரின் நலனிற்காகவே என்பதை நாம் உறுதியாக நம்பினால் இவை எல்லாம் ஓர் அற்ப விசயமாகவே இருக்கும். எதற்கும் சிந்தித்து முடிவெடுங்கள். எங்களைப் பொறுத்த வரை விடுதலைக்காகப் புறப்பட்ட எந்தப் போராளியையும் நடுத்தெருவில் விட நாம் தயாரில்லை' என்று கூறினார். அத்துடன் உலகத்தின் பல்வேறு பாகங்களிலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் சாதித்த சாதனைகள் என்னென்ன வென்பதையும் எடுத்துரைத்தார். 
தலைவருடனான சந்திப்பின் பின் நாம் புது உற்சாகம் மிகுந்தவர்களாகக் காணப்பட்டோம். 'நாளை கூறும் முடிவும் இதுவாகத்தானிருக்கும். அதை இன்றே கூறுகிறோம். எந்தக் கஸ்டத்தையும் சந்திக்க நாம் தயாராகவே இருக்கின்றோம்' என்று உறுதியாகக் கூறினோம். 
இதை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமில் தான் எத்தனை விதமான அனுபவங்கள். அந்த இனிமையான நாட்கள் எமது நினைவில் என்றும் பசுமையானவையே! பயிற்சியின்போது இராணுவ ரீதியாக ஆண்களிற்கு நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தோம். முகாமில் குறும்புச் செய்கைகள் மூலம் நீ இருக்கும் இடத்தையே கலகலப்பாக்கி விடுவாய். முகாமில் எம்மிடையே சின்னச் சின்னப் பிரச்சினைகள் வரும்போது அங்கே சமரசம் செய்வதற்கு நீ தோன்றி விடுவாய். எமது முகாமிற்குத் தேவையான சாப்பாடு மற்றும் பொருட்கள் எமது முகாம் அமைந்திருந்த ஒரு குறிப்பிட்ட இடத்தை வாகனத்தின் மூலம் வந்தடையும். அங்கிருந்து அவற்றை நாமே சுமந்து செல்லவேண்டும். 
அப்போது எல்லாம் எமது வேலையில் கடினம் தெரியாமலிருப்பதற்காகவே நீ 'ஜோக்' அடித்துக்கொண்டே வருவாய். உனது கலகலப்பான போக்கினால் எமது வேலை கடினமானதாகத் தோன்றாது. 


ஒரு முறை எம்மால் வெட்டப்பட்ட சுமார் 20 அடி ஆழமுள்ள கிடங்குக்குக் கீழே இருந்த வெடி வைத்துத் தகர்க்கப்பட்ட கல்லொன்றை வெளியே எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது மிகவும் பெரியது. பாரமானது. 'இதைத் தூக்க நான் எனது பையன்களை அனுப்புகிறேன்.' என பொன்னம்மான் சொல்லவே 'இது எம்மால் முடியும்' என நீ பொன்னம்மானிடம் சொன்னாய். 'இல்லை முடியாது. இதற்குப் பையன்கள் தான் சரி' என பொன்னம்மான் கூறியபோது அவர் எம்மைச் சோதிக்கத்தான் கூறுகிறார் என்று தெரிந்து இதை ஒரு சவாலாகவே ஏற்று நாங்கள் அதை வெளியே கட்டி இழுத்தெடுத்தோம். அப்போது எமக்கு ஏற்பட்ட பூரிப்பு! ஒரு குழந்தையைப் போல் பொன்னம்மானின் முன்னால் 'எப்படியம்மான் எங்கட வேலை?' என்று குதூகலித்து ஆர்ப்பரித்தாயே அது இன்றும் என் நினைவில் உள்ளது.
முகாமில் ஒரு கடினமான உழைப்பாளியாய், ஒரு கலகலப்பான போராளியாய், ஒரு சிறந்த நடிகையாய், அருமையான சமையல்காரியாய், குறிதவறாது துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்றவளாய் இப்படிப் பல்வேறு வகையிலும் நீ முதன்மையானவளாகத் திகழ்ந்தாய். சு.P.பு (ராக்கட் லோஞ்சர்) பிரயோகிப்பதற்கு நீயும் நானுமே தெரிவு செய்யப்பட்டோம். இப்படியாக எமது பயிற்சிக்காலம் கழிந்தது. எமது நட்பும் உறுதியாக வளர்ந்தது. உனக்கு முன்னரே பயிற்சியை முடித்துக்கொண்டு களத்தில் நின்ற நான் மகிழ்ச்சியுடன் உன்னை வரவேற்றேன். ஆம்! இமல்டா வந்து விட்டாள். எமது முகாம் இனிக் கலகலப்பாகி விடும் என்ற மகிழ்ச்சியே எல்லோருக்கும். 
ஆனால் நீயும் நானும் பிரிய வேண்டிய கட்டம் வந்தது. ஏனெனில் துரதிருஸ்டவசமாக நான் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாய் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 
ஆனாலும் மன்னாரிலே படையெடுத்து வந்த சிறிலங்கா இராணுவத்தினர் பலரை பலியெடுத்த மாபெரும் தாக்குதலில் உனது திறமையைக் கேள்வியுற்று மகிழ்ச்சியுற்றேன். 
நான் செய்ய வேண்டிய வேலையையும் சேர்த்து இரட்டிப்புத் திறமையைக் காட்டி எதிரிகளைக் கலங்கவைத்தாய். உனது குழுவினரின் தாக்குலிற்கு ஈடுசெய்ய முடியாத சிங்கள இராணுவம் குண்டு வீச்சு விமானங்கள் மூலம் பாரிய குண்டுகளை வீசிப் பலத்த அழிவை உண்டாக்கி தனது கையாலாகாத் தனத்தைப் புலப்படுத்தியது. 


அதன் பின் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் இருந்த என்னை நீ வந்து சந்தித்தாய். 'வசந்தி! நீ விரைவில் குணமடைந்து விடுவாய். ராக்கட் லோஞ்சருடன் என் வசந்தியைக் காணும் நாள் கிட்டடியில் தான் உள்ளது. அப்போது தான் எனக்கும் உனக்கும் முறையான போட்டியுள்ளது.' என்றெல்லாம் எனக்கு நம்பிக்கையூட்டுவாய். எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம், தமிழீழப் போராட்டத்தின் பெயரால் இணைந்தோம். ஆனால் இன்று ஒரே குடும்பம் போன்று அனைவரும் என் மீது பாசமழை பொழிகிறீர்களே என்று திக்குமுக்காடினேன்.
வடமராட்சியில் சிறிலங்கா இராணுவத்துடன் நிகழ்ந்த தாக்குதலிலும் உனது திறமையைப் பற்றி அனைவரும் என்னிடம் வந்து கூறுவார்கள். புதிதாகப் பயிற்சியாளர்களில் ஒருவராக நீயும் திகழ்கிறாய் என்றும் செய்தி கிட்டியது. 
வந்தது ஒப்பந்தம், யாருக்காக இந்த ஒப்பந்தம்? இது எமது நலனிற்காகச் செய்யப்பட்டதல்ல என்பது தெளிவாகவே புரிந்தது எமக்கு. ஆயினும் இந்திய மக்கள் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், அன்பையும் வெளிப்படுத்தும் முகமாக எமது போராளிகளின் மகத்தான தியாகங்களினாலும், இரத்தத்தாலும் பெறப்பட்ட ஆயுதங்களை இந்தியப் படையிடம் ஒப்படைக்க வேண்டியேற்பட்டது. 
சிங்கள இனவாதப் பூதம் இவ்வொப்பந்தத்தை விழுங்கும் காலம் வெகுதூரத்திலில்லை என்று தலைவர் தீர்க்க தரிசனத்துடன் கூறினார். காலமும் இதை நிதர்சனமாக்கியது. இந்தியப் படையின் துரோகத்தனமும் அம்பலப்படுத்தப்பட்டது. நாம் மீண்டும் ஆயுதங்களை ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். 
ஒரு தேசியக் கொடியைப் பறக்க விடுவதற்காக ஆயிரக்கணக்கான கறுப்புக் கொடிகளைப் பறக்க விடத் தயாரானோம். 
இந்தியப் படையின் துரோகத்தனத்திற்கு எதிராக நீ ஒவ்வொரு தாக்குதலிலும் முன்னணியில் நின்று போராடினாய் எனக் கேள்விப்பட்டேன். நாம் பலவீனப்பட்டு விட்டோம் என்று இந்திய அரசு தப்புக்கணக்குப் போடுகிறது. எமது பலமே மக்கள் சக்திதான். தமிழீழத்தை மீட்டெடுக்கும் வரை சந்ததி சந்ததியாக நாம் போராடியே தீருவோம் என்பதைக் காலம் உணர்த்தும் என்றே எண்ணுகிறேன். 
ஆனாலும் என்னுயிர்த் தோழி! வன்னியில் நடந்த முற்றுகை ஒன்றில் உன்னை நாம் பறிகொடுத்து விட்டோம் என்ற வரக்கூடாத அந்தச் செய்தி வந்தே விட்டது. நான் அதிர்ந்து விட்டேன். இனி அந்த 'ஜெனரேற்றர்' சிரிப்பைக் கேட்கவே முடியாது. உனது குறும்புகளைக் காண முடியாது. ஆனால் உனது துப்பாக்கியின் ஓசை மட்டும் நிரந்தரமாக நின்று விடவில்லை. அது வேறொருவர் மூலம் முழங்கிக் கொண்டே உள்ளது. அதிலிருந்து முழங்கும் ஒவ்வொரு வேட்டும் 'மலரும் தமிழீழம்! மலரும் தமிழீழம்!' என்றே ஒலிக்கிறது. 


உனது ஆத்மா எனக்குள் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கிறது. நான் விரைவாகக் குணமாகி வருவதை என்னால் உணர முடிகிறது. இமல்டா! நீ விதைக்கப்பட்டு விட்டாய். இதோ! களத்தை களத்தை நோக்கி ஆயிரமாயிரம் இமெல்டாக்கள்! ஆம் விரைவில் அவர்களில் ஒருத்தியாய் நானும். அதுவரை காத்திருப்பாய் என் தோழி! 

- வசந்தி –
1996 மார்ச் எரிமலை பத்திரிகையிலிருந்து...